Sunday, August 21, 2016

மது


தமிழ் கூறும் நல்லுலகம் நான் கள்ள மௌனம் காத்ததாய்ப் பழி சொல்லும் என்பதால், குடியைப்பற்றி என் கருத்தையும் பதிவு செய்து விடுகிறேன். போன முறை இந்தியா சென்றபோது ஒரு நண்பன் அவன் மகனை என்னிடம் அறிமுகப்படுத்திவிட்டு, ஏதாவது அறிவுரை சொல்லு என்றான். அந்தந்த வயதில் அவ்வயதிற்கேற்ற தவறுகள் செய்தே வளர்ந்தவன் என்பதாலும், அறிவுரைகளுக்கு நான் அதிக மதிப்பளித்ததில்லை என்பதாலும், அறிவுரை கூறும் அளவிற்கு எனக்குத் தகுதியில்லை என்று நாசுக்காக விலகிவிட்டேன். இதை சொல்லக் காரணம், இது அறிவுரை கிடையாது, என் கருத்து மட்டுமே என்கிற பொறுப்பு துறப்பிற்காக.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தீர்களேயானால் உங்களுக்குத் தெரியும், நாம் எப்போதும் இரண்டாய்ப் பிரிந்தே இருந்திருக்கோம், யின்-யாங் போல, MGR-சிவாஜி, ரஜினி-கமல், "24" அருமையானப் படம் என்பவர்கள்- "24" மோசமானப் படம் என்பவர்கள், சமந்தாவிற்காக "24" படத்தைப் பார்த்தவர்கள் - சமந்தாவே இருந்தாலும் "24" படத்தைப் பார்க்காதவர்கள், இப்படி இரண்டுப்பட்ட சமுதாயம் நாம். மது அருந்துவதில் உள்ள கருத்து வேறுபாடும் இப்படித்தான் அமைந்துள்ளது. ஒரு தரப்பு குடிக்கவே கூடாது என்றும் மற்றொன்று குடித்தால் தான் கவிதை எழுதுவதிலிருந்து கக்கா போவது வரை சாத்தியம் என்றும் கூறுகிறது. இதில் குடிக்கவே கூடாது என்கிற தரப்பு, மாதமொருமுறையோ இருமுறையோ ஒரு க்ளாஸ் வைனோ ஒரு போத்தல் பியரோ குடிப்பவனையும், தினம் போதை தலைக்கு ஏறி நெற்றியால் நடப்பவனையும் ஒரே தராசில் ஏற்றி கருத்தெனும் கத்தியால் பின்புறத்தில் குத்துகின்றனர். இன்னொரு தரப்போ நாங்கள் காலையில் இருந்து மாலை வரைக் குடிப்போம், அது எங்கள் பிறப்புரிமை, நாங்கள் பொது வாழ்வில் இருந்தாலும், மகனுக்கு எழுதிய கடிதத்தை நாங்களே வெளியிட்டாலும், நீங்கள் அந்தக்குழந்தையின் மீதோ அதுப்போல பாதிக்கப்படப்போகும் மற்ற குழந்தைகளின் மீதோ இரக்கம் காட்ட வேண்டிய அவசியமில்லை எனக் கூறி அதேக் கத்தியை உருவி அதே இடத்தில் குத்துகிறார்கள். என் உறவுகள் மற்றும் நட்புகளில் இந்த இரண்டு கோஷ்டியும் உண்டு. இதுவரை மதுவே குடித்திராத ஆனால் பெரும் அயோக்கியகர்களாய் திரிபவர்கள் என் உறவில் உண்டு. இவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தை எல்லாம், தங்கள் புனித பிம்பத்தால் மறைத்துக் கொள்வர். அதேபோல மதுவால் தன் உடலைக்  கெடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு மனவலியை ஏற்படுத்திய நெருங்கிய நட்புகளும் உண்டு. சிறிதளவு மது அருந்துபவர்கள் பெருங்குடிகாரர்களுக்கு வக்காலத்து வாங்குவதும் முறையல்ல.
அளவாய் சாப்பிடும் மதுவினால் நிறைய நன்மைகள் உண்டு என்றே ஆய்வுகள் கூறுகின்றன. அதுவும் தினம் அருந்துவது உகந்ததல்ல. சில நேரங்களில் நிதானமாய் இருப்பதற்கு சிறிதளவு மது தேவைப்படுகிறது. இல்லை, இல்லை, அதற்கு பதிலாக நான்கு மணிக்கு எழுந்து தியானமும், யோகாசனமும் செய் என அறிவுரைகூறும் ராம்தேவ்களுக்கு என்னிடம் எந்தத் தர்க்கமும் இல்லை.
நல்லா இருங்கடே.