முதலில் மலையாளிகளிடம் தான் நட்பானோம். அதற்கு காரணம் மேய்ப்பர்களை எல்லாம் ஓர் அறைக்கு இருவர் என்று தங்க வைத்திருந்தனர், எங்கள் மேய்ப்பர் மலையாளி மேய்ப்பருடன் தங்கி இருந்தார். தமிழையே மூக்கால் பேசிக்கொண்டு அதை மலையாளம் என்று ஜல்லி அடித்துக்கொண்டு திரிந்தார். என்னதான் சொல்லுங்கள், சேட்டன்களின் உய்தலுணர்வு (survival instinct) வேறெவர்க்கும் கிடையாது. கோரக்பூர் எங்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் புதிய ஊர், புதிய மனிதர்கள் தான், ஆனாலும் ஒரு சேட்டன் நாங்கள் பகலில் செல்லும் சமூக சேவை நாட்களில், முதல் சில நாட்களுக்குள்ளாகவே யாரையோ பிடித்து, மிலிட்டிரி ரம் வாங்கி வந்து விட்டான். அது ஒரு காரிக்கிழமை இரவு, அடுத்த நாள் பகலில் நிகழ்வுகள் ஏதுமில்லை. புது நட்புகள் எல்லோரும் வட்டமாய் அமர்ந்து பருக ஆரம்பித்தோம். விளைவுகளைப் பற்றி அதிகம் எழுதப் போவதில்லை, மிலிட்டிரி ரம் பரிச்சியம் உள்ள அனைவரும் அன்றிரவுக்கான கதையை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள், அதிக வித்தியாசம் இருக்காது. மிதமான போதையில் சேட்டன் என்னிடம், அந்த பிராத்மிக் பெண்ணை என்னிடம் தமிழிலேயே பேச சொல்லு என்றான். அவனிடம் சொல்லு என்று “நே”யை கை காண்பித்தேன். நே முறைத்தான். சேட்டன் இன்னொரு தகவலையும் சொன்னான் அன்று மதியம் அவர்கள் திரும்பும் போது “பிராத்மிக்” வாகன ஓட்டுநரிடம் பேரம் பேசினாளாம், முந்தைய முறையை விட அதிகமாக கொடுத்தோம் என்று கூறி விட்டு அசூசையாய் தலையாட்டினான். சரி, இப்பத்தியுடன் அவ்விரவை கடந்து விடுவோம்.
அடுத்த நாள் மாலை கலை நிகழ்ச்சிகள், கிட்டத்தட்ட 4-5 மாநிலங்கள் மட்டுமே ஈடுபாட்டுடன் நிகழ்ச்சிகள் நடத்தின. அது போட்டியில்லை என்றாலும் நாங்களே எல்லா நாட்களிலும் மேடையை ஆக்கிரமித்திருந்தோம், எங்கள் நிகழச்சிகளுக்காக காத்திருக்க ஆரம்பித்திருந்தனர். நிறைய ஊமை நாடகங்கள் (mime) தயாரித்து வைத்திருந்தோம். திருச்சியிலேயே இதற்காக நிறைய பயிற்சி எடுத்திருந்தோம். புது விருந்தினர்கள் வந்தால் ஒரு பரதம், சில பாடல்கள், அடுத்து எங்கள் ஊமை நாடகங்கள், ஒரு சூத்திரம் வைத்திருந்தோம், கொஞ்சம் நகைச்சுவை, ஒரு அதிர்ச்சி, ஒரு செய்தி. ஒவ்வொரு நாளும் கடைசியாய் சொல்ல வந்த செய்தியை மாற்றினோம், அது ஒருவித எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது, ஊமை நாடகம் என்பதால் மொழி பிரச்சனை இல்லை, புதிதாய் இருந்தது. நாடி பிடித்து விட்டோம், அனைவருக்கும் பிடித்திருந்தது. முக்கியமாய் அனாசுயா (அனு) விற்கு பிடித்திருந்தது. சில நாட்களிலேயே ஓரளவு நல்ல நண்பர்கள் ஆகியிருந்தோம். எங்கள் குழுவிற்கு அரசு மருத்துவமனையில் சமூக சேவைக்காக நேரம் ஒதுக்கி இருந்தார்கள். ஒரிசாவில் இருந்து வந்த 10 பேரும் செவிலியர் கல்லூரியில் இருந்து வந்தவர்கள். முதல் நாள் மருத்துவமனை என்னை சோதித்து விட்டது, அனுபவமில்லாததால் அந்த துர்நாற்றம் படுத்திவிட்டது, கூட இருந்த சிலருக்கும் அப்படியே, அனு எதற்கும் அசரவில்லை, எல்லா பொறுப்பையும் எடுத்துச் செய்தாள், அடுத்து வந்த நாட்களிலும் தொடர்ந்து அவளே நிறைய இடங்களை எவ்வித முகசுளிப்பும் இல்லாமல் சுத்தம் செய்தாள், அவள் மீது அதீத மரியாதை உருவானது. 4-ம் நாள் நான் “அன்பே சிவம்” படத்தில் மாதவன் இரண்டு கைகளையும் நீட்டி என்னிடமிருந்து இரத்தம் எடுத்துக்கொள்ளுங்கள் என்பாரல்லவா அந்நிலையில் இருந்தேன். அனு யாரையும் அலட்சியப்படுத்தாமல் எல்லோரிடமும் தன்மையாக நடந்து கொண்டாள், வலிக்காத ஆங்கிலம் பேசினாள், நிறைய பயணித்திருந்தாள், மென்மையாய் சிரித்தாள், கையில் எப்பொழுதும் நான் கேள்வியே பட்டிராத ஆன்டன் செகாவோ, தஸ்தயேவ்ஸ்கியோ வைத்திருந்தாள், பெரிய குடும்பம், ஓரளவு வசதியான குடும்பமும் கூட, சேவை மனப்பான்மையுடன் செவிலியர் கல்வி பயில்கிறாள். என்னைப் பொறுத்தவரையில் எங்கோ உயரத்தில் இருந்தாள். இந்த பயணம் வரையில் நான் பயணித்திருந்தது வடக்கே திருப்பதி வரையிலும் தெற்கே காரைக்குடி வரையிலும் மட்டுமே, படித்திருந்தது கொஞ்சம் சுஜாதா, கொஞ்சம் பாலகுமாரன், நிறைய புஷ்பா தங்கதுரை!! என் தேடல் அத்துடன் தேங்கி போன காலமது, அதனால் அவளிடம் அளந்தே பேசினேன். எங்கே ஏதாவது பேசி, என் அறியாமை வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்தேன்.
கலை நிகழ்ச்சிகளின்போது 4வது வரிசையில் அமர்வாள், வெள்ளையோ அல்லது வேறு லேசான வண்ணங்களிலோ சுடிதார் அணிந்திருப்பாள், பெரும்பான்மையான நேரங்களில் வெள்ளை தான். மேடையிலிருந்து அவளைப் பார்ப்பேன், அவள் சிரித்துவிட்டால் நாடகம் வெற்றி என்று மகிழ்ச்சியாகிவிடும். சில மாநில குழுக்கள் அதே நிகழ்ச்சிகளை எவ்வித மாற்றமும் இல்லாமல் தினம் மேடையேற்றினர், அந்த சமயத்திலெல்லாம் அனுவைப் பார்ப்பேன், அவள் அந்நிகழ்வுகளைப் பொருட்படுத்தாமல் அவளுக்கே உரிய பிரத்யேக பாணியில் புத்தகம் படித்துக்கொண்டிருப்பாள். இப்பொழுதும் என்றாவது அவள் நினைவு வந்தால், அவள் வெள்ளை சுடிதாரில் குறுக்கே கால் போட்டு இவ்வுலகை மறந்து படிப்பதும், ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் தலை முடியை லேசாய் கோதும் காட்சியுமே நினைவுக்கு வரும்.
புத்தகம் படிக்கும் பெண்களின் மீதான ஈர்ப்பின் ஆரம்பப்புள்ளி, அனு!!!
- பயணம் தொடரும் #GorakhpurStories