1995-ஆம் ஆண்டு, தஞ்சையில் ஒரு சிறிய கம்பெனியில் கம்ப்யூட்டர்களைப் பழுது பார்க்கும் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த சமயம், ஒரு நாளேட்டில் "சோனி பிளாப்பி டிஸ்க்" விற்க விற்பன்னர்கள் தேவை என்று வந்த விளம்பரத்திற்கு, விண்ணப்பித்தேன். முக்கியமாய் அதற்கு விண்ணப்பிக்கக் காரணம், அந்த கம்பெனி பெங்களூரில் இருந்ததாலும், எனக்கும் பெங்களூரு அக்காலத்தில் மிகவும் பிடித்த ஊர் என்பதாலும். விண்ணப்பித்தப் பிறகு அதைப் பற்றி மறந்தும் போனேன். அப்பொழுதெல்லாம், வேலைக்கு கடிதம் மூலம் விண்ணப்பித்து விட்டு தேவுடு காக்க வேண்டும். காத்திருந்தேன். இரண்டு மாதங்கள் கழித்து, அவர்களே போக்குவரத்து மற்றும் 3 நாட்கள் தங்குவதற்கான செலவையும் குடுத்து நேர்முகத் தேர்வுக்கு அழைத்தார்கள். அத்தேர்வில், பொருட்கள் விற்பதில் என்னுடைய அனுபவத்தைப் பற்றிக் கேட்டனர். ஒரு சங்கிலி, ஒரு கீபோர்டு மற்றும் ஐந்து நிமிடங்களே ஓடும் ஒரு அலாரம் கடிகாரம் இவைகளை அடகு வைத்த அனுபவம் மட்டுமே இருந்தது, மற்றபடி அவர்கள் கேட்ட விற்பனை அனுபவமெல்லாம் எள்ளளவுக்குக் கூட கிடையாது. இருப்பினும், தினம் ஐநூறு/ஆயிரம் பிளாப்பி டிஸ்க் விற்றுவிடும் உத்வேகத்துடன் இருப்பதாய் அவர்களை நம்ப வைத்துவிட்டேன். அவர்களும் என்னை நம்பி வேலை குடுத்து விட்டனர்.
(உபரி தகவல் - அந்த ஐந்து நிமிடமே ஓடும் அலாரம் கடிகாரத்தை, வழக்கமாக அதிக நேரம் அரட்டை அடிக்கும் சேட்டிடம், ஐந்து நிமிடத்திற்குள் அடகு வைத்து காசு வாங்கிவிட்டு வெளியேறியது, இதுவரை நான் திறமையாக கையாண்ட இக்கட்டான சூழ்நிலைகளில் முதன்மையான ஒன்று அல்லது அது மட்டுமே ஒன்று என நானே என்னைப் பாராட்டிக்கொள்வதுண்டு).
தேவையான படிவங்களை எல்லாம் சரிபார்த்தப் பிறகு, வேலைக்கு சேர முறைப்படியான உத்தரவு சில நாட்களில் வந்து சேர்ந்தது. வேலைக்குச் சென்றேன். அப்போது அவ்வளவு பெரும் அதிர்ச்சி காத்திருக்குமென எனக்குத் தெரியவில்லை. நான்கு இளைஞர்களை அறிமுகம் செய்து வைத்து இவர்களெல்லாம் உன்னுடைய டீமில் வேலை செய்பவர்கள், நீதான் இவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனக்கூறி திரு.காஷ்யப்(முதலாளி) என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். என்ன செய்வதென்று புரியாமல், கை கூப்பினேன், நன்றி தான் சொல்கிறேனென்று நினைத்துக்கொண்டு என் தோளில் தட்டிக் குடுத்துவிட்டு சென்றார். அங்கிருந்த ஒருவன் மற்றொவனிடம் கன்னடத்தில் பேசினான், உடல் மொழியிலிருந்து நிச்சயமாய் என் மீது கோபமாக இருக்கிறான், என்னைத் திட்டுகிறான் என்று மட்டும் புரிந்தது. திரு.காஷ்யப் என்னை அழைத்து நிறைய படிவங்களைப் படிப்பதற்குக் குடுத்தார், அதில் ஒரு மாதத்தில் நான் எவ்வளவு பிளாப்பி டிஸ்க்குகள் விற்க வேண்டும் என்றும், என் டீமில் உள்ள மற்றவர்கள் எவ்வளவு விற்க வேண்டுமென்ற தகவல் எல்லாம் இருந்தது. என்னுடைய விற்பனைக்கு மட்டுமல்லாமல், அங்கிருந்த மற்ற நான்கு இளைஞர்களின் விற்பனை அளவிற்கும் நானே பொறுப்பு என்று எழுதியிருந்தது. வியர்க்க ஆரம்பித்தது. அன்று மாலை வீட்டிற்கு செல்லும்போது என்னை அறியாமல் அழுகை வந்தது. மௌனமாய் அழுதுகொன்டே வண்டியில் வீடு வந்து சேர்ந்தேன்.
பொறுப்பைக் குடுத்தவுடன் கைக்கூப்பி, மௌனமாய் சசி அழுததன் காரணம், உங்களுக்குப் புரிகிறதா?
--ssk

No comments:
Post a Comment