Saturday, February 25, 2017

விநாயகமுருகனின் "வலம்" நாவல் பற்றி என் கருத்து.



பதினாறாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கும் கதை, முதல் சில அத்தியாயங்கள் மெதுவாக நகர்ந்தாலும், நரி வேட்டை பற்றிய அத்தியாயத்தில் சூடுப் பிடித்து கதை முடியும் வரை உள்ளிழுக்கிறது. நிறைய உண்மைச் சம்பவங்களைச் சுற்றிப் பின்னப்பட்டக் கதை. சில சம்பவங்கள் அல்லது நிகழ்வுகளை சாமர்த்தியமாக கதைக்குள் நுழைக்கிறார் ஆசிரியர். கொலையாளி யாரென முதல் சில  அத்தியாயங்களிலேயே யூகிக்க விட்டுவிடுகிறார், கரோலின் பாத்திரத்தின் தடுமாற்றத்தைக் கூட முன்பே யூகிக்க முடிகிறது, அப்படியும் சுவாரசியம் குறையாமல் கதை நகருகிறது. நிகழ்வுகளால் பழைய நூற்றாண்டு ஒன்றின் கதையைச் சொல்லும் "Ken Follett"ன் "World Without End" எனும் புனைவின் யுத்தியை எனக்கு இந்நாவல் நியாபகப்படுத்தியது.


Y

நாவலில் வரும் இச்சம்பவம் என்னைப் புன்னகைக்க வைத்தது. "அடையாற்றிலிருந்து குதிரைப்பந்தய விடுதி செல்லும் பாதையில் முன்பு அடர்ந்த காடு இருந்தது, கொடுமையான முட்புதர்கள் நிறைந்த காடு, பால்டிமர் சிறந்த வேட்டைக்காரர். ஒருமுறை வேட்டைக்குச் செல்லும்போது குதிரையிலிருந்து தவறி முட்புதரில் விழுந்துவிட்டார். முதுகுத்தண்டில் அடிபட்டு படுக்கையில் கிடந்தவர் சில நாட்களில் இறந்துபோனார். அவரது பிருஷ்டம் முழுவதும் விஷ முட்கள் குத்திய புண் ஆறாமல் இறந்து போனார். அவர் நினைவாகவே அந்தப் பகுதிக்கு பால்டிமர் பாட்டம் என்று பெயர் வைத்துள்ளார்கள்"
ஆசிரியரின் உழைப்பு இக்கதையில் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது, நிச்சயமாய் இதற்கான ஆராய்ச்சிகளுக்கு சில வருடங்களாவது செலவிட்டிருப்பார். வசதியான வாழ்விற்கு எவ்வளவு இயற்கை வளங்களை அழித்துள்ளோம் எனும் வேதனையான உண்மையைப் புரிய வைக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜாதிய அரசியலை தொட்டு செல்கிறார், அக்கால கட்டத்திற்கும் இப்போதைக்கும் சிறிய அளவிலேயே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது கூடுதல் வேதனை. இதையும் சொல்லிவிடுகிறேன் , நிகழ்வுகளைச் சுற்றி கதையைப் பின்னியதால் ஒரு சில இடங்களில் மட்டும் அது ஒட்டாமல் துருத்தலாய்த் தெரிந்தது.


நான் சமீப காலத்தில் படித்த புத்தகங்களில் "வலம்" முக்கியமான, சுவாரசியமான புத்தகமாய் கருதுகிறேன்.

No comments:

Post a Comment