"The only way of knowing a person is to love them without hope" - Walter Benjamin
மதியம் வரவிருந்த இருப்பூர்திக்காக காலையிலேயே நானும் என் நண்பன் ரகுவும் சென்னை மத்திய இருப்பூர்தி நிலையத்தில் போய்க் காத்திருந்தோம். எலி தான் எள்ளுக்கு காயுது எலி புழுக்கை ஏன் காய வேண்டும் என்றெண்ணி அவன் நான் கிளம்புறேன்டா, நீ இருந்து பார்த்து பேசிவிட்டு ஆட்டோ புடிச்சு பெசன்ட்நகர் கடற்கரைக்கு வந்துவிடு என்றான், இல்லை நீ ஆட்டோ புடிச்சுப் போ, நான் மோட்டார்சைக்கிளில் வருகிறேன் என்று அவனை அனுப்பிவிட்டு காத்திருந்தேன். சென்னையிலிருந்த காலகட்டத்தில் தினம் மாலை பெசன்ட்நகர் கடற்கரை தான் நண்பர்களுடன் கூடுமிடம். நேரம் நெருங்க நெருங்க பதற்றம் அதிகமாகியது. புன்னகையோடு வந்தாள், என்னை வழியனுப்ப கோரக்பூரில் எப்படி வந்திருந்தாளோ, அப்படியே இருந்தாள். பார்த்த நொடியில் பட்டாம் பூச்சிகள். விட்ட இடத்திலிருந்து தொடருவது போல் தான் இருந்தது. அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்து பேசினோம். பாண்டிச்சேரி அரபிந்தோ ஆசீரமத்திற்கு போக வேண்டும் என்றாள். எத்தனை நாள் அங்கே இருக்கப் போகிறாய் என்றேன், நாட்கள் அல்ல மாதங்கள் என்றாள். ஒரே ஒரு கைப்பை மட்டுமே எடுத்து வந்திருந்தாள். அவள் நெருங்கிய உறவினர்கள் ஏற்கனவே அங்கிருப்பதாகவும் அவர்கள் சில வாரங்களுக்கு முன் வந்தபோது அவர்களிடம் அவளுக்குத் தேவையான பொருட்களை கொடுத்தனுப்பிவிட்டதாக கூறினாள். வேறென்னமோ பேசினாள், அங்கே இருக்கும் அவள் உறவினர்கள் பற்றி, உறவு முறைப்பற்றி எல்லாம் சொன்னாள். என காதுகளில் விழுந்ததெல்லாம், தூரம் கம்மியாகிவிட்டது, என்னருகில் இருப்பாள். வசந்த காலம் ஆரம்பம்.
மோட்டார்சைக்கிளில் அவளுடன் பாண்டிச்சேரி பயணம். பெசன்ட்நகர் கடற்கரையில் நண்பர்களை சந்தித்து அவர்களுக்கு அவளை அறிமுகம் செய்தேன், என் முகத்தில் பெருமிதம். அவளின் பிரேத்யேக புன்னகையுடன் எல்லோரிடமும் பேசினாள். நண்பர்களுக்கு அவளைப் பிடித்திருந்தது. பிடிக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம். இன்றும் பெசன்ட்நகர் கடற்கரை அவளை நினைவூட்டும். நானும் அவளும் நண்பர்களுடன் சிரித்து அரட்டை அடித்தது ஒரு முறையேனும் நினைவில் வந்து மறையும். பாண்டிச்சேரி அரபிந்தோ ஆசீரமம் வந்து சேர்ந்தோம். அவள் உறவினர்களும் நண்பர்களும் இருந்தனர். நான் நிறைய முறை பாண்டிச்சேரிக்கு வேறு காரணங்களுக்காக போயுள்ளேன், ஆசீரமத்திற்கு இதுவே முதல் முறை. பல விஷயங்கள் போல இதையும் எனக்கு அறிமுகப்படுத்துவது அனு தான், இது நாள் வரை நான் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் முதற்கொண்டு, மனிதர்களிடம் பழகும் விதம் வரை அவள் பாதிப்பு உள்ளது, இருந்தே தீரும். அவள் நிறைய பேரை அறிமுகப்படுத்தினாள், பாண்டியில் எனக்கு தெரிந்தவர்களை விட, அவளுக்குத் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருந்தனர். அரபிந்தோ ஆசீரமம் ஒரிசாவால் நிறைந்திருந்தது, ஒரு சமயல்காரர் உட்பட. அவள் அறிமுகப்படுத்திய எல்லோருடனும் சிறிது நேரம் பேசினேன். அடுத்த நாள் கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். இருட்டில் வாகனம் ஒட்டாதே என்றாள், நீ வீடு போகும் வரை கவலையாக இருக்கும் என்றாள், அந்த அக்கறை பிடித்திருந்தது.
அதன் பிறகு அடுத்த ஒரு வருடமும் அடிக்கடி தொலைபேசிணோம், நேரிலும் அடிக்கடி சென்று பார்த்தேன். வருகிறேன் என்று சொன்னால், சரி வா, ஆனால், பேருந்தில் வா என்று சொல்லுவாள். அவள் சிலமுறை சென்னைக்கு வந்தாள், சில இடங்களில் சுற்றிவிட்டு மாலை வழக்கமாக கூடும் பெசன்ட்நகர் கடற்கரைக்கு வந்து நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு அவளைப் பாண்டிச்சேரியில் விட்டுவிட்டு வருவேன். அவளும் எங்கள் நண்பர்கள் குழுவில் ஒருவளாகியிருந்தாள். பாண்டிச்சேரியில் அவள் நண்பர்கள் அவளுடைய உறவினர்கள் எல்லோரும் எனக்கு நன்றாக பரிச்சயம் ஆகியிருந்தனர். ஒருமுறை நான் சென்றபோது அவளுடைய உறவினர் ஒருவர் எனக்கு உணவு பரிமாறும்போது சிரித்துக்கொண்டே ஏதோ சொன்னார், எல்லோரும் லேசாக புன்னகைத்தனர். என்னவென்று கேட்டேன், அதற்கு அனு சிரித்துக்கொண்டே, மருமகன் வந்துள்ளார் நன்றாக கவனி என்று கூறுகிறார் என்றாள், அவள் கண்களைப் பார்த்தேன், ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாக புரிந்தது, அவளுக்கு என் மீது காதல் இருந்தது ஆனால் அது ஒரு ஓரமாகத்தான், சேவை தான் அவள் முதல் இலக்காக இருந்தது. நான் அதற்கு தடை சொல்வேன் என்று எண்ணினாள் என்று நினைக்கிறேன், அதனாலேயே அவளால் என்னை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் என்னிடம் கடைசி வரை காரணம் சொல்லவே இல்லை. நானும் கட்டாயப்படுத்தி கேட்கவும் இல்லை, என் மனதின் ஓர் ஓரத்தில் அவள் அப்படி நினைத்திருந்தால் தோற்றுவிட்டேன் என்றே தோன்றியது.
சில மாதங்களில் அமெரிக்க கம்பெனி ஒன்றின் நேர்முகத்தேர்வில் வேலை கிடைத்தது. அனுவிற்கு தொலைபேசினேன், சொன்னேன். நீண்ட மௌனமே பதிலாக இருந்தது. என் மனதில், “போகாதே என்று சொல் அனு, உன்னுடனேயே இருந்து விடுகிறேன், அது ஒரிசாவாகட்டும் இல்லை அது அரபிந்தோ ஆசிரமமாகட்டும்”. மௌனம் கலைந்து பேசினாள், இந்த வாரம் கிளம்பி வருகிறாயா என்றாள், அவளாக வர சொல்வது முதல்முறை என்று நினைக்கிறேன். சரி என்றேன். காலையிலேயே வந்துவிடு என்றாள். ஒரு சிறு இடைவெளிவிட்டு தயக்கமாக மோட்டார்சைக்கிளில் வா என்றாள்.
அடுத்த நாள் காலையிலெல்லாம் சென்றுவிட்டேன். காலை உணவு ஒன்றாக அருந்தினோம். கோரக்பூரின் கடைசி வாரம் நினைவிற்கு வந்தது. அவளிடம் சொன்னேன், அவளுக்கும் அப்படியே என்றாள் புன்னகையோடு. மூன்றாண்டுகளாகிறது நான் அவளிடம் என் காதலை சொல்லி என்பது நினைவிற்கு வந்தது. நிராகரிக்கப்பட்டும் அதே மூன்றாண்டுகள் என்பது வலித்தது. அவளுடைய நண்பர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் விடைப்பெற்றோம். மோட்டார்சைக்கிளில் கிளம்பினோம், ஆரோவிலுக்கு சென்று நேரம் செலவழித்தோம், நிறைய பேசினோம், நிறைய சிரித்தோம். அவள் தானும் ஒரிசாவிற்கு திரும்ப போவதாகக் கூறினாள். கிட்டத்தட்ட கோரக்பூரில் இருந்த ஒவ்வொரு நாளையும் நினைவு கூர்ந்து பேசினோம். சேட்டன் நடனம் என்கிற பெயரில் ஏதோ ஒன்றை ஆடியதை சொல்லி சிரித்தோம். என் நாடகங்களைப் பற்றி பேசினாள். அதில் ஒரு காட்சியில் அவள் நடித்ததை நினைவு கூர்ந்தோம். அவள் என்னிடம் நீ கலைத்துறையில் ஏதாவது வேலைக்கு செல்வாய் என்றே நான் நினைத்திருந்தேன், அமெரிக்காவிற்கு செல்வாய் என்று நினைக்கவில்லை என்றாள். நானும் அதற்கு திட்டமிடவில்லை என்றேன். அவள் வழக்கமான புன்னகையைத் தொலைத்து, சற்றே சோர்வான முகம்கொண்டு அமெரிக்கா சென்றவுடன் என் நியாபகம் உனக்கு இருக்குமா என்றாள். உயிர் உள்ளவரை என்றேன். என்றாவது ஒரு நாள் உலகுக்கு நம் கதையை சொல்வேன் அனு. மாலை கடற்கரைக்கு வந்தோம், சூரியன் மறைவதைப் பார்த்துக்கொண்டே இருந்தோம், தோள் சாய்ந்திருந்தாள், மெலிதாய் விசும்பினாள். இந்த மாலை நீண்டுக்கொண்டேப் போகாதா என்று தோன்றியது. கடைசி இரண்டு மணி நேரம் எதுவுமே பேசவில்லை இருவரும், பேசவேண்டியதையெல்லாம் பேசித்தீர்த்திருந்தோம். இருவருக்கும் தெரிந்திருந்தது இதுவே கடைசி சந்திப்பென்று. நடுங்கும் என் விரல்களை கோர்த்து விடைகொடுத்தாள்.




No comments:
Post a Comment