உள்ளூர் கல்லூரியில் படித்த ஒரு சிலர் நல்ல நண்பர்களானார்கள். அவர்களின் நட்பால் கொஞ்சம் வெளியே போய் சுற்றிவிட்டு நேரம் தாழ்த்தி வருவது போன்ற சிறு அத்துமீறல்கள் வாடிக்கையாகி இருந்தது. ஒருநாள் ஒரு நட்சத்திர விடுதிக்கு, எங்களையும் மற்றும் இன்னும் இரண்டு, மூன்று மாநிலத்தவர்களையும் கலை நிகழ்ச்சிகளுக்காக அழைத்துச் சென்றனர், நாங்களும் நாடகங்கள் நடித்து விட்டு வந்தோம். அது அடுத்த நாள் அங்கே ஒரு உள்ளூர் செய்தித்தாளில் வந்தது, அது ஒரு சிறு சலசலப்பை உண்டு பண்ணியது. உள்ளூர் அரசியல்வாதிகளுக்காக பிற மாநிலத்தவர்களை கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்து கலை நிகழ்ச்சி நடத்தினார் என ஒருங்கிணைப்பாளருக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். தேவேந்திர சிங் உள்ளூர்காரன், அவன் இதைப் பற்றி எங்களுக்கு விளக்கினான். உள்ளூர் அரசியல், எங்கள் புகைப்படத்தைப் போட்டு எங்கள் தலையை உருட்டிருந்தனர். எங்கள் மேய்ப்பரிடம் என்ன செய்வது என்று கேட்டோம், அவரோ பிராத்மிக்கிடம் அந்த செய்திதாளில் வந்த செய்தியை தமிழில் மொழிபெயர்த்து எழுதி தருமாறு கேட்டுக்கொண்டிருந்தார். எங்களை உற்சாகப்படுத்துவதற்காக தேவேந்தர் அவன் வீட்டிற்கு என்னையும் இன்னொரு தமிழ் நண்பனையும் மேலும் 2 சேட்டன்களையும் விருந்துக்கு அழைத்தான். அவனுக்கு நாங்கள் ஆங்கிலத்தில், அதிகமில்லை 15-20 வாக்கியங்களை எப்படி சரியாக அமைப்பது என்று கற்றுக் கொடுத்திருந்தோம். அவன் குடும்பத்தில் எல்லோரும் வாட்டசாட்டமான ஆண்கள், இராணுவத்தில் பணி புரிபவர்கள். ஜம்முவிலிருந்து ஒரு பெண், பெயர் நீரு, ஒரு நீதிபதியின் மகள் அவள், பேரழகி, அவள் மீது மய்யல் கொண்டிருந்தான், அவளைப்பற்றி தினம் எங்களிடம் பேசுவான், ஆனால் அவளிடம் அவன் பேசி நான் பார்த்ததில்லை. அவனுடன் நிறைய வருடங்கள் நட்பிலிருந்தேன். சில வருடங்களில் அவனும் இராணுவத்தில் சேர்ந்தான். திருமண பத்திரிக்கை அனுப்பி இருந்தான், பெண் பெயரைப் பார்த்தேன், நீரு அல்ல, வீட்டில் பார்த்த பெண், திருமணத்திற்கு பின், அவன் தஞ்சைக்கு வந்து கோவில்கள் எல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னான், பிறகு அது கைகூடவில்லை. நான் அமெரிக்கா வந்த பிறகு கூட நட்பிலிருந்தோம். ஒருமுறை தொலைபேசியபோது, அமெரிக்க வாழ்வைப் பற்றியெல்லாம் விசாரித்து விட்டு, என்னிடம், அமெரிக்க மக்கள் இந்திய இராணுவத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டான், நானும் யோசித்துப்பார்த்தேன், அது வரை கூட பணி புரிந்த எவரும் என்னிடம் இராணுவத்தைப் பற்றியெல்லாம் பேசியது இல்லை, அவர்கள் என்னிடம் அதிக பட்சமாக பேசுவது, இந்திய உணவுகள் பற்றியும், கோயில்கள் பற்றியும் தான், சொன்னேன், அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. எந்நிலையிலிருந்தாலும் எல்லோருக்கும் ஒரு அங்கீகாரம் தேவையாயிருக்கிறது. மெதுவாய் எங்கள் நட்பு நீர்த்துப்போனது.
Tuesday, July 4, 2023
கோரக்பூர் கதைகள் – 5
பிராத்மிக்கின் லக்னோ சித்தப்பா குடும்பத்துடன் வந்திருந்தார். அவளை இரண்டு நாள் அவருடன் அழைத்து சென்றார், நே தான் தவித்து போய் விட்டான். சேட்டனிடம், நீயும் சோகமாக இருக்கிறாயா என்று கேட்டேன், அவன் ஆமாம் அதனால் தான் இன்று மிலிட்டரி காண்டீன் வரை செல்ல வேண்டும் என்றான்.
ஒரு நாளின் பெரும் பகுதியை அனுவுடன் தான் செலவழித்தேன், ஆனால் அப்போது மற்ற குழு நண்பர்களும் உடனிருப்பர். மாலை சிற்றுண்டி முடிந்த பிறகு, தினமும் அம்மாவுக்கு தொலைபேச அனுவுடன் வெளியே செல்ல ஆரம்பித்திருந்தேன். அவளுடன் அதிக நேரம் செலவழிக்கவும், கூட்டத்திலிருந்து விலகி நிறைய நேரம் பேசிக்கொண்டிருக்கவும் இதுவே நல்ல காரணமாக அமைந்தது. அம்மாவிடம் சில நிமிடங்கள் தான் தொலைபேசுவது, அனுவும் அம்மாவிடம் நன்றாக பழக ஆரம்பித்திருந்தாள். ஒரு நாள் அம்மாவே என்னிடம், தம்பி, நீ திருச்சில இருந்து கூட என்கிட்ட தினமும் பேச மாட்டியேப்பா, இப்போ பாசம் அதிகமாவே தெரியுது, அடுத்த வாரம் திரும்ப திருச்சி வரும் வண்டியில் ஏறுவியா இல்லை ஒரிசா வண்டியா, அம்மாவின் நக்கல்!! சரிம்மா நான் நாளைக்கு கூப்புடுறேன்.
கிளம்பும்போது அதுவே நினைவில் ஓடிக்கொண்டிருந்தது, இன்னும் ஒரு வாரம் தான், பாரமாக இருந்தது. அனுவிடம் அதைப்பற்றி பேச எத்தனித்தபோது, அவள் கேட்டாள், இன்றிரவு பார்ட்டி என்று கேள்விப்பட்டேனே!! சேட்டன் ஓட்டை வாயன். சரி, மிலிட்டரி ரம் பற்றி பிரீட்ரிக் நீட்சே என்ன சொல்லியிருக்கார் போன்ற அறிவுரைக்கு என்னைத் தயார் படுத்திக்கொண்டு காத்திருந்தேன், ஆனால் அவள் அதற்கு பிறகு ஒரு வார்த்தை கூட அதைப்பற்றி பேசவில்லை. அவள் எதிர்வினை இப்படித்தான் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கும்போது அதற்கு நேர் எதிர் திசையில் பயணிப்பாள், அதுவே அவள் மீதான ஈர்ப்பை இன்னும் அதிகமாக்கியது. ஆமாம் நீ ஏதோ சொல்ல வந்தாயே என்றாள், இது சரியான தருணமா என்றெல்லாம் யோசிக்கவில்லை நான், இன்னும் ஒரு வாரம் தான் ஊருக்கு திரும்ப என்பது மட்டுமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது, அவளை எனக்கு ரொம்ப பிடித்துள்ளதாகவும் அடுத்த வாரம் ஊருக்கு கிளம்பும் முன் என் காதலை உன்னிடம் தெரிவிக்க வேண்டும், அதற்காக தான் இங்கே இந்த இடத்தில் உன்னிடம் சொல்கிறேன் என்றேன், இதையெல்லாம் இப்படி கோர்வையாக சொல்லாமல், ஒரு மாதிரியாக உளறிக்கொட்டினேன். புன்னகைத்தாள், ஆமோதிப்பதுப் போல் தலையசைத்து புரிகிறதென்றாள். இப்படியாக என் முதல் காதலை கோரக்பூர் நகரத்தின் ஒரு சிறிய பொதுதொலைபேசிக் கடையின் வாசலில் வைத்து தெரிவித்திருந்தேன்!!
விடுதிக்கு வந்தபிறகு நண்பர்களிடம் பேசும் போதுதான் உரைத்தது, ஆம், இல்லை தானே பதிலாக இருக்க முடியும், புரிகிறதென்பது என்ன பதில், குழம்பினேன். சேட்டனின் அறைக்குச் சென்றோம்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment