எல்லோரும் ஒன்று கூடிய முதல் நாளில் அறிமுகப் படலம் முடிந்தபின், எடுத்த எடுப்பிலேயே ஒரு பெண் தன்னுடைய உடல்மொழியிலிருந்து பேசிய முதல் பேச்சிலிருந்து ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தினாள். யாருக்கெல்லாம் இந்தி தெரியும் என்றாள், ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை, தான் பிராத்மிக் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாய் முகத்தில் அதீத பெருமையுடன் கூறினாள். முதல் வகுப்பிற்கும் எனக்கும் காத தூரம், அதுவரை இருப்பூர்திகளில் கூட முதல் வகுப்பில் பயணித்திராத காரணத்தால், அவளிடம் பேசுவதையே தவிர்த்துவிட்டேன். நேஷனல் நண்பனுக்கு மட்டுமே அவளுடன் ஒத்துப்போனது. அவளிடம் எது ஒன்று சொல்வது என்றாலும் அவன் மூலமாகவே பேசினோம். கலை நிகழ்ச்சிகளுக்குப் பயிற்சி எடுக்கும் போது தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் வருமாறு வடிவமைக்கக் கோரினாள். எடுத்த எடுப்பிலேயே தனக்கு லக்னோவில் ஒரு சித்தப்பா இருப்பதாகவும் இந்தப் பயணமே அவளுக்காக உருவாக்கப்பட்டது போல அதிகாரம் செலுத்தினாள் . என்னுடைய நிகழ்வுகளில் அவள் பங்களிப்பு இல்லாதவாரும் அப்படியே இருந்தாலும் அது நே நண்பனுடன் இருக்குமாறும் பார்த்துக்கொண்டேன். இதிலெல்லாம் எங்களை மேய்க்க வந்த ஆசிரியரின் பங்களிப்பு என்னவென்று கேட்கிறீர்களா? ஒன்றுமில்லை என்றே கூறுவேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் சப்பாரி உடை அணிந்து வருவார், இருப்பூர்தியில் பயணிக்கும்போது கூட!! அப்பொழுதெல்லாம் திருச்சியில் இருந்து கோரக்பூர் போய் சேரவே 3 நாட்கள் ஆகும். நாங்களெல்லாம் அழுக்காய் பயணிக்கும்போது அவர் மட்டும் மடிப்பு கலையாத சப்பாரியில் வலம் வருவார்.
Sunday, June 25, 2023
கோரக்பூர் கதைகள் – 2
கோரக்பூர் இருப்பூர்தி நிலயத்தில் எங்களை வரவேற்க தீன் தயாள் கல்லூரி பேராசிரியர்கள் இருவரும் சில ஒருங்கிணைப்பார்களும் சில மாணவர்களும் வந்திருந்தனர், அன்று வேறு சில மாநிலங்கலிருந்தும் மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 10 மாணவர்கள், 5 ஆண்கள், 5 பெண்கள், ராஜஸ்தானும், ஒரிசா (ஒடிசா) வும் விதிவிலக்கு, ராஜஸ்தானிலிருந்து 10ம் ஆண்களும், ஓடிசாவிலிருந்து 10ம் பெண்களுமாக வந்திருந்தனர். கல்லூரி வளாகத்திலேயே ஆண்கள் விடுதியும் பெண்கள் விடுதியும் இருந்தது. ஓர் அறைக்கு 5 பேர் தங்குமாறு வசதி செய்து தரப்பட்டிருந்தது. முதல் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு நிறைய பிற மாநில நட்புகள் உருவாக ஆரம்பித்திருந்தது. மொழியே தெரியாமல் நட்பு வளர்த்து அறை மாறியெல்லாம் சில நாட்கள் தங்கி இருந்தோம். ஒவ்வொரு நாளும் காலை 9 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டிருந்தது, பகலில் எங்காவது சிறு குழுக்களாக சென்று சமூக சேவை செய்துவிட்டு இரவில் கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாநிலங்கள் வழங்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பகலில் சமூக சேவை செய்யும் குழுக்கள் மாநில வாரியாக இல்லாமல் எல்லா மாநிலங்கலிருந்தும் ஒன்றிரண்டு பேராக இருக்குமாறு சிறு குழுக்களாக அமைத்திருந்தனர். என் அதிர்ஷ்டம் நான் முதலில் இருந்த குழுவில் அந்த பிராத்மிக் பெண்ணும் இருந்தாள். நண்பன் “நே” யிடம் மாறிக்கொள்கிறானா என்று நான் கேட்கும்முன் மாறியே விட்டான். ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட வேண்டும், நமக்கு எந்தளவிற்கு கேரளப் பெண்களின் மீதீர்ப்புள்ளதோ அதைவிட அதிகமாகவே சேட்டன்களுக்குத் தமிழ்ப் பெண்களின் மீதீர்ப்புண்டு. அதில் ஒரு சேட்டனுக்கு பிராத்மிக் மீது ஈர்ப்பு, அவனும் விரும்பி அவளிருந்த குழுவில் போய் சேர்ந்துக்கொண்டான், அம்முக்கோனத்தைப் பிறிதொரு நாள் பார்ப்போம்.
நானிருந்தக் குழுவில் நான்கைந்து மாநிலங்களிலிருந்து மாணவர்கள் இருந்தனர், முக்கியமாய் ஓடிசாவிலிருந்து அனாசுயா, முதல் நாள் அறிமுகத்தின்போது தெரியாது, என் வாழ்வையும் ஏன் நான் வாழ்வைப் பார்க்கும் விதத்தையுமே இவள் மாற்றப்போகிறாளென!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment